குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால், இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில், மூன்று வேளை தடவினால், வாந்தி நின்று விடும். மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கும், ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால், மூக்கடைப்பு நீங்கும்.
மன அழுத்த பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ‘ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவர். நா வறட்சி, வாயில் அதிகமாக உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு, ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும்.
வெயிலில் அதிகம் சுற்றித்திரிந்தால், தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை தம்ளர் நீரில் போட்டு காய்ச்சி, சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால், தலைசுற்றல் உடனே நீங்கும். விக்கலால் அவதிப்படுவோர், இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளை போட்டு, அரை தம்ளர் நீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் கசாயத்தை குடித்தால் போதும்.
சிறிதளவு ஏலக்காய்பொடியை, அரை தம்ளர் நீரில் கொதிக்க விட்டு, உணவு உட்கொள்வதற்கு முன் குடித்தால், வாயுத்தொல்லை நீங்கி விடும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களுக்கும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.