அழகான மற்றும் மென்மையான உதடுகளைப் பெற பலரும் பயன்படுத்தும் லிப் பாம்கள், சில நேரங்களில் உதடுகளைக் கருமையாக்கக் கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உதடுகளின் வறட்சியைப் போக்கப் பயன்படுத்தப்படும் இந்த அழகுப் பொருட்களே சில நேரங்களில் உதட்டின் இயற்கையான நிறத்தைக் கெடுத்துவிடுகின்றன என அழகுக்கலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சந்தையில் கிடைக்கும் பல லிப் பாம்களில் வாசனைக்காகவும், குளிர்ச்சியான உணர்வுக்காகவும் மெந்தால், கற்பூரம் மற்றும் செயற்கை நறுமணங்கள் சேர்க்கப்படுகின்றன.
இவை உதடுகளின் மென்மையான தோலில் எரிச்சலையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தி, நாளடைவில் உதடுகளைக் கருமையாக மாற்றுகின்றன.
எஸ்.பி.எஃப் (SPF) சூரிய பாதுகாப்பு காரணி இல்லாத சாதாரண லிப் பாம்களைப் பயன்படுத்திக் கொண்டு வெயிலில் செல்லும்போது, சூரியனின் புற ஊதாக் கதிர்கள் உதடுகளை எளிதில் பாதிக்கின்றன.
லிப் பாமில் உள்ள எண்ணெய் தன்மை சூரிய ஒளியை ஈர்த்து உதடுகளில் மெலனின் நிறமியை அதிகரித்து கருமையை உண்டாக்குகிறது.
காலாவதி தேதியை கவனிக்காமல் தொடர்ந்து ஒரே லிப் பாமை பயன்படுத்துவதாலும், தரம் குறைந்த மலிவான பிராண்டுகளைப் பயன்படுத்துவதாலும் உதடுகளின் இயற்கையான நிறம் மங்கி கருமை படர்கிறது.
இதில் உள்ள பாரபென் மற்றும் நச்சு இரசாயனங்கள் உதட்டின் மெல்லிய தோலைச் சேதப்படுத்துகின்றன.
லிப் பாம் தடவிய பிறகு பலருக்கும் உதடுகளை அடிக்கடி நாவால் எச்சில் படுத்தும் பழக்கம் இருக்கும். எச்சிலில் உள்ள அமிலத்தன்மை மற்றும் என்சைம்கள் உதடுகளை மேலும் வறட்சியாக்கி, லிப் பாமின் தன்மையோடு வினைபுரிந்து உதட்டின் நிறத்தைக் கருமையாக்கிவிடும்.
இயற்கையான தேன் மெழுகு, ஷியா பட்டர், மற்றும் கோகோ பட்டர் போன்ற பொருட்கள் அடங்கிய கெமிக்கல் இல்லாத லிப் பாம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இரவில் தூங்குவதற்கு முன் தூய்மையான நெய் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி வருவது உதட்டின் கருமையை நீக்கி இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைத் தரும்.