அழகுக் குறிப்புகள்

கை மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது எப்படி?

எரிச்சல் உள்ள இடங்களில் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது கைகள் மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி, சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் பராமரிக்கப் பல்வேறு நவீன மற்றும் இயற்கை வழிமுறைகள் தற்போதைய காலகட்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய அவசர உலகில், முக அழகிற்குத் தரும் அதே முக்கியத்துவத்தைச் கை மற்றும் கால்களின் சருமப் பராமரிப்பிற்கும் பலரும் வழங்கத் தொடங்கியுள்ளனர்.

நவீன மற்றும் விரைவான வழிமுறைகள்

வேக்சிங்:

முடிகளை வேரிலிருந்தே அகற்றுவதற்கு இது மிகவும் சிறந்த வழியாகும். இதனால் அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்கு முடி வளர்ச்சி இருக்காது. பொதுவாக வேக்சிங் பண்ணும்போது வலி இருக்கும். மேலும், இது இறந்த சருமச் செல்களையும் நீக்குகிறது.

ஷேவிங்:

மிகக் குறைந்த நேரத்தில், எவ்வித வலியும் இல்லாமல் முடிகளை நீக்க இது உதவுகிறது. ஆனால், ரேஸர் பயன்படுத்தும் போது மாய்ஸ்சரைசர் அல்லது ஷேவிங் ஜெல் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

ஹேர் ரிமூவல் கிரீம்ஸ்:

ஹேர் ரிமூவல் கிரீம்ஸ் வலியின்றி சில நிமிடங்களில் முடிகளை கரைத்து நீக்கப் பயன்படுகின்றன. எனினும், இதில் ரசாயனங்கள் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் 'பேட்ச் டெஸ்ட்' செய்த பின்பே பயன்படுத்த வேண்டும்.

ட்ரிம்மிங்:

சில ட்ரிம்மர்ஸ் பயன்படுத்தினால் சிலரின் சருமத்திற்கு சேராமல் போய்விடும். ஆனால் ட்ரிம்மர் மூலம் எவ்விதக் காயமும் இன்றி, சருமத்தின் மேல் உள்ள முடிகளை மிக எளிதாக வெட்டி அகற்றலாம். சில நாட்களிலேயே மீண்டும் வளரத்தொடங்கி விடும்.

இயற்கை மற்றும் வீட்டு வைத்திய முறைகள்

சர்க்கரை மற்றும் எலுமிச்சை வேக்சிங்:

சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சூடாக்கி, வேக்சிங் கலவை தயாரித்து கொஞ்சம் சூடு போனவுடன் அதனை முடி இருக்கும் இருக்கும் இடத்தில் தேய்த்துவிட்டு, 25 முதல் 30 நிமிடங்கள் வரை காயவிட்டு பிறகு அதனை எடுத்தால் முடி நீங்கிவிடும்.

கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள்:

கடலை மாவுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் பால் கலந்து பேஸ்ட் போலச் செய்து கை, கால்களில் தடவ வேண்டும். அது நன்றாக உலர்ந்ததும், முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் தேய்த்துக் கழுவினால் முடிகள் இயற்கையாக உதிர்ந்து விடும்.

பப்பாளி மற்றும் மஞ்சள் கலவை:

பச்சைப் பப்பாளியின் சாறுடன் மஞ்சள் தூள் கலந்து தொடர்ந்து தடவி வந்தால், அது முடியின் வேர்க்கால்களைப் பலவீனப்படுத்தி முடி வளர்ச்சியைப் படிப்படியாகக் குறைக்கும்.

முட்டை வெள்ளைக்கரு மற்றும் சோளமாவு பேஸ்ட்:

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு ஸ்பூன் சோளமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டைக் கை, கால்களில் தடவி முழுமையாக உலர விடவும். நன்றாகக் காய்ந்ததும், இதனை மெதுவாக உரித்து எடுத்தால் தேவையற்ற முடிகள் வேரோடு வலியின்றி நீங்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கை மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கிய பிறகு, சருமத் துளைகள் திறந்து வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதனைத் தவிர்க்க, கெமிக்கல் இல்லாத நல்ல மாய்ஸ்சரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி ஈரப்பதத்தை மீட்டெடுப்பது அவசியமாகும். மேலும், எரிச்சல் உள்ள இடங்களில் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நேரடி வெயில், சுடுதண்ணீர் குளியல் மற்றும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது அலர்ஜி மற்றும் பருக்கள் வராமல் சருமத்தைப் பாதுகாக்கும்.