அழகுக் குறிப்புகள்

உங்க ஸ்கின் ரொம்ப ட்ரை ஆகுதா? வறண்ட சருமத்தை மீட்டு பளபளப்பாக்க...

முடிந்தளவு உடம்பை வறட்சி ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

சருமத்தில் போதிய ஈரப்பதம் இல்லாதபோது வறட்சி, அரிப்பு, மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கவும், சருமத்தை எப்போதும் மிருதுவாக வைத்திருக்கவும் இயற்கையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் மசாஜ்

தினமும் இரவு தூங்குவதற்கு முன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் துளைகளுக்குள் சென்று, இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுத்து வறட்சியை உடனடியாகக் குறைக்க உதவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் வறட்சி ஆகாமல் இருக்கும்.

கற்றாழை மற்றும் தேன் கலந்த ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் மற்றும் சுத்தமான தேன் அரை ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை சருமத்திற்குத் தேவையான நீரைக் கொடுக்கிறது; தேன் ஒரு இயற்கை ஹியூமெக்டண்ட் என்பதால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து சருமத்தில் தக்க வைக்கிறது.

காய்ச்சாத பால் மற்றும் மஞ்சள் பூச்சு

தேவையான அளவு காய்ச்சாத பச்சைப் பாலில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து, பஞ்சு கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான துணியில் துடைக்க வேண்டும்.

இதனால் முகத்திற்கு பாலில் உள்ள லாக்டிக் அமிலம் வறண்ட, இறந்த சரும செல்களை மெதுவாக நீக்குகிறது. மஞ்சள் கிருமித்தொற்றைத் தடுத்து முகத்திற்குத் தனிப் பொலிவைத் தருவதற்கு உதவுகிறது.

கனிந்த பப்பாளி மற்றும் வாழைப்பழம் மாஸ்க்

நன்கு கனிந்த பப்பாளி அல்லது வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பேக் போல போட வேண்டும்.

வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால், வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சருமத்தின் வறட்சியால் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கும். முகத்திற்கு பொலிவையும் தரக்கூடியது.

இயற்கையான ஈரப்பதம்

தினமும் வெளிப்புறப் பராமரிப்புடன் சேர்த்து, குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உணவில் சேர்க்க வேண்டும்.

உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் சருமம் இயற்கையாகவே வறட்சி நீங்கி உள்ளிருந்து பளபளக்கத் தொடங்கும்.

முடிந்தளவு உடம்பை வறட்சி ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.