ஆரோக்யம்

குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்

நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.

நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால், குழந்தை பிறந்தால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற குழப்பம். பொருளாதாரரீதியாகத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதமாகிவிடுகிறது.

கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள். நார்த்திசுக் கட்டிகள் 20, 30 சதவிகிதம் பேருக்கு காணப்படும். சிறிய அளவிலான கட்டிகளை அகற்ற வேண்டியதில்லை. கர்ப்பப்பையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான கட்டிகள் இருந்து, கர்ப்பப்பை பெரிதாக இருந்தால், அவை கர்ப்பத்தை பாதிக்கும். அவற்றை அகற்ற வேண்டும். இந்தப் பிரச்னை பரம்பரையாக வரக்கூடும். அம்மாவுக்கு நார்திசுக்கட்டிகள் இருந்திருந்தால், மகளுக்கும் வரக்கூடும். கர்ப்பப்பையை அடைத்துக் கொண்டிருக்கும் கட்டிகளை நீக்கினால்தான் குழந்தை தங்கும்.

மற்றொரு பொதுவான பிரச்னை ‘ஓவரியன் சிஸ்ட்’ எனப்படும் சாக்லேட் கட்டிகள். மாதவிடாய் சுழற்சியின்போது வெளியேறும் ரத்தத்தின் சில துளிகள் கர்ப்பப்பையின் முன்னாலும் பின்னாலும் தேங்கிவிடும். அந்த ரத்தம் உறைந்து, பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு சாக்லேட் நிறத்தில் இருக்கும். அதனால்தான் `சாக்லேட் கட்டி’ என்கிறோம். சிலருக்கு இந்தக் கட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிதாக ஆகிவிடும்.

பக்கத்திலிருக்கும் பகுதிகளுடன் ஒட்டிக்கொள்வதால், கருக்குழாய் தடைப்படும். இந்தக் கட்டிகளால் சிலருக்கு தாம்பத்யமே வலி நிறைந்ததாக மாறிவிடும். கருக்குழாய் அடைப்பு, கர்ப்பப்பைக்குள் சிறிய சதை வளர்தல், கருக்குழாய் சூலகம், அதிலுள்ள சிறிய ரத்தக்குழாய்கள் என ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சையளிக்கலாம்.

இவை தவிர ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை ஹார்மோன் பிரச்சனைகள். தைராய்டு குறைபாடு, மூளையிலிருந்து சுரக்கும் `புரோலாக்டின்’ என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைப்படும். இந்த ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருந்தால், சிலருக்கு மார்பில் நீர் கசியும். புரோலாக்டின் சுரப்பு அதிகரித்தால், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும். அதன் காரணமாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியே வருவது கடினமாகிவிடும். ஆண்களுக்கும் தைராய்டு குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்திக்குக் காரணமான ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருக்கலாம். பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளை எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

சுயஇன்பத்துக்கும் குழந்தையின்மைக்கும் தொடர்பில்லை. மாதவிடாய் சுழற்சி போன்று விந்தணுக்கள் உருவாவதும் சுழற்சிதான். விந்தணுக்கள் சிறிய அளவில் உருவாகி முதிர்ச்சியடைய மூன்று மாதங்கள் ஆகும். அப்படி முதியர்ச்சியடையும்போது பழைய விந்தணுக்கள் வெளியேறி, புதியவை உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும்.