நம்முடைய உடல் சுற்றுப்புற வெப்பத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஆனால் குளிர் அறைகளில் இருக்கும்போது செயற்கையான சமநிலை கிடைத்துவிடுவதால் உடலின் செயல்பாடு தேவையற்றதாகி விடுகிறது.உடல் தன்னுடைய இந்த செயலை பயன்படுத்தாத போது சேமிக்கப்படும் சக்தி கொழுப்பாக மாறி உடலில் தேங்குகிறது. கடைசியில் இது உடல் பருமனுக்கு வழிசெய்து விடுகிறது.
குளிர் சாதன அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்னொரு பெரிய சிக்கல் இருக்கிறது. மனித உடல் அறைகளிலுள்ள குளிர் காலநிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு அதிக நேரம் அங்கேயே செலவிடுகிறது. இதனால் வெளியிலுள்ள வெப்பத்தைத் தாங்கும் திறன் உடலுக்குக் குறைகிறது. குளிர் அறைகளை விட்டு நிஜத்தின் வீதிகளுக்கு வரும்போது வெப்ப அலைகள் குளிர் நிலையிலுள்ள உடலை அதிகமாய் பாதித்து விடுகின்றன. இதனால் தான் குளிர் அறைகளில் இருப்பவர்கள் வெளியே வந்ததும் பதறி ஓடுகிறார்கள்.
குளிர் சாதனம் நம்மை எப்போதுமே இரண்டு விதமான காலநிலைகளில் வாழச்செய்கிறது. குளிர் அறையிலிருந்து வெளியே வருவதும், பிறகு உள்ளே செல்வதும் என வாழ்க்கை ஓடும் போது உடல் அதற்குரிய மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டியிருப்பதால் பல நோய்களைக் கொண்டு வந்து விடுகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் அதிக நேரம் குளிர்சாதனக் கருவிகள் ஓடும்போது ஒரே காற்றை திரும்பத் திரும்ப சுழற்சியாய் பயன்படுத்துவதால் காற்றில் இருக்கும் மாசு வெளியே எங்கும் செல்லாமல் சுவாசத்தில் கலந்து விடுகிறது.
இது தொற்று நோய்க் கிருமிகள் யாராவது ஒருவரிடம் இருந்தாலே அந்த அறையிலுள்ள அனைவரை யும் விரைவில் பற்றிக் கொள்கிறது. சிக் பில்டிங் சிண்ட்ரோம் (SBC) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நோய் களுக்கு குளிர்சாதனமும் ஒருமுக்கிய காரணம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.