தற்போதும், சீனாவின் வட மாநிலங்களில் திணை அதிகம் பயிரிடப்படுகிறது. உடல் வலுப்பெற, நம் முன்னோர் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, திணை ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். இதனால், அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று, இவற்றின் பயன்பாடு குறைந்து, அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.
உடல் வலுவிழந்து, பல்வேறு நோய்களின் பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வரும் பொருட்களில் ஒன்று திணை. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேனும், திணைமாவுமே உணவாக இருந்தன. திணையில், உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, திணையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கால்சியத்தின் அளவும், மற்ற தானியங்களை விட அதிகமாக உள்ளது. இதை, களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர்.
மாவாக அரைத்து, சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சி அடைந்தவர்களுக்கு கொடுக்கும் வழக்கம், இன்றும் இருந்து வருகிறது. உடலை வலுவாக்கி, சிறுநீர் பெருக்கும் தன்மையும் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கவல்லது. பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. திணையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது.