கோடையில் தகிக்கும் வெயிலுக்கு உடல் இழக்கும் சத்துக்களை நிரப்ப இனிப்பும், ருசியும் உள்ள மாம்பழம் சாப்பிடுவது நல்லது. மா சாகுபடியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில், 1500-க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் பளபளப்பான மஞ்சள் நிற அல் போன்சோ மாம்பழங்கள் ருசி நிறைந்தவை, புகழ் பெற்றவை. ஏப்ரல்-மே மாதங் களில் அல்போன்சோ தாராளமாக கிடைக்கும்.
பங்கனபள்ளி மற்றும் ருமானி, இமாம் பசந்த், செந்தூரா வகை மாம்பழங்கள் ருசிக்காக மிகவும் பிரபலமானவை. இதில் இமாம் பசந்த் மணமும், இனிப்பும், மென்மையும் கொண்டது. பங்கனபள்ளி அளவில் பெரிய பழம், மெல்லிய சதை, சாப்பிட எளிது. செந்தூரா பழங்கள் நல்ல மணம், அழகான நிறம், இனிப்பு சமநிலை உள்ளது.
இவை தவிர மல்கோவா, கறி அல்போன்சா, நீலம் போன்ற பழங்களும் பரவலாக விரும்பி உண்ணப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின்-சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின்-ஏ பார்வை தெளிவு பெற உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் குறைய உதவும்.
மாம்பழம் நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் வெயில் காலத்தில் சாப்பிடலாம். ஆனால், அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை மற்றும் கலோரி அதிகரிக்கலாம். எனவே. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.