சுண்டைக்காயை கிராமப்புறங்களில் வயிற்றிலுள்ள பூச்சிகளை ஒழிக்க உபயோகப்படுத்துவார்கள். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. ஜீரணத் தன்மை கொண்டது.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும். அல்சர் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை சாப்பிட்டு வந்தால் பாதிப்பு குறையும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சுண்டைக்காய் பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் துணைபுரிகிறது.
பச்சைச் சுண்டைக்காயை சமையலில் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது சுண்டைக்காய் வத்தலாகவும் பயன்படுத்தலாம். எனினும், அதிகப்படியான கசப்புத் தன்மை இருப்பதால் அளவுக்கு அதிகமாக எடுக்காமல், வாரத்திற்கு 2 முறை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது.