உடலின் சீரான ஹார்மோன் சுரப்புக்கும் திடமான தேகத்துக்கும் சத்தான உணவு அவசியம். திருமணத்துக்குத் தயாராகும் ஆண், பெண் இருவருக்கும் சிறப்பு உணவு வகைகளைச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே வழங்கும் வழக்கம் முன்பு பரவலாக உண்டு. பெண்ணின் மாதாந்திரச் சுழற்சி சீராக அமையவும் கர்ப்பப்பை வலுவூட்டலுக்கும் சிறப்பு உணவைக் கொடுப்பது இன்றும் பல இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது. ஆணோ பெண்ணோ ரத்தசோகை இருந்தால், அவர்களது ஆரோக்கியம் சரிவதுடன் இச்சைக்கான உணர்வுகள் மட்டுப்படவும் செய்யும். அதேபோல ஆணுக்கான டெஸ்ட்டோஸ்டீரோன், பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் போன்ற தனித்துவ ஹார்மோன்கள் சுரப்புக்கும் உணவுத் தேர்வில் கவனம் அவசியம்.
தினசரி ஒரு கீரை சாப்பிடுவது நல்லது. கால்சியம், வைட்டமின் டி சத்து அடங்கிய முருங்கைக் கீரையில் பொரியல் அல்லது சூப் வைத்துச் சாப்பிடலாம். மணத்தக்காளி, வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும். வலுவான வயிறு உடலின் ஒட்டுமொத்த வலுவைச் சொல்லும். சுண்டைக்காய், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.
இவற்றில் முக்கியமானது சாரைப் பருப்பு. இதை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஊறவைத்து, பொங்கலில் மிளகு சேர்ப்பது போல அரிசியில் கலந்து சமைத்துச் சாப்பிடலாம். உயிரணுக்களைப் பெருக்கும் இதை அரபு நாடுகளில் கஞ்சியாக்கிப் பரிமாறுகிறார்கள். பிரியாணியில்கூட அவர்கள் பாதாம், பிஸ்தா சேர்ப்பார்கள். பாதாம் பருப்பில் சட்னி, துவையல் செய்து சாப்பிடலாம். உலர் பருப்புகளில் அக்ரூட் பருப்பு முக்கியமானது. பாதாம் பிசினை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் ஜவ்வரிசிக்குப் பதில் பாயசத்தில் சேர்க்கலாம்.
முருங்கைப்பூவுடன் முந்திரி, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்ந்து சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். சாலாமிசிரி வேர், உடலுக்கு வலுச்சேர்ப்பதுடன் நலிந்த தேகத்துக்கு பொலிவை மீட்டுக் கொடுக்கும். இதை அரைத்து அரிசியுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். காய்ச்சலில் நீண்ட நாள் விழுந்தவர்கள் விரைவாக உடல் நலம் பெற இதைக் கொடுப்பார்கள். கோதுமைப் பாலில் இனிப்புகள் செய்யலாம். சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிடுவதுகூட ஆண்களின் ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டும்.
பெண்கள் பருவமடைந்த நாள் தொடங்கி சிறப்பு உணவூட்டத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்பூரல் மூலிகையில் பச்சரிசி மாவு கலந்து அடை செய்து சாப்பிட்டுவர, மாதவிடாய் சுழற்சி சீராவதுடன் கர்ப்பப்பை பிரச்சினைகள் மட்டுப்படும். இந்த மூலிகையைத் தமிழக அரசு மாத்திரையாகவும் தயாரித்து வழங்குவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம். அந்தக் காலத்தில், கல்யாண முருங்கை உள்ள வீட்டைத் தேடி பெண் எடுப்பார்கள். இந்த இலை, பல் பூண்டு, மிளகு ஆகியவற்றில் தலா மூன்றைச் சேர்த்தரைத்து பருவமடைந்த பெண்ணுக்கு மூன்று நாட்கள் தருவார்கள். கருமுட்டையைத் தகுதிப்படுத்தும் இந்த மருத்துவத்துக்கு இன்றும் ஈடில்லை. கல்யாண முருங்கையில் அடை செய்தும் சாப்பிடலாம்.
சோற்றுக் கற்றாழையின் உள்ளே உள்ள சோற்றுப் பகுதியை ஜெல்லை எடுத்து ஏழு முறை நன்றாகக் கழுவி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் உதிரப்போக்கில் ஒழுங்கு பிறக்கும். மாதவிடாய் நேரத்து வயிற்று வலி மறையும். மாம்பழ சீசனில் அதன் கொட்டையை உடைத்து, பருப்பை மட்டும் ஒரு புட்டியில் சேகரித்து வைக்கலாம்.
அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் நாட்களில் இந்தப் பருப்பைச் சுட்டு மோரில் கரைத்து ஒரு வேளை குடித்தாலே குணம்பெறலாம். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதும் நீண்ட ஒழுங்குக் குலைவும் கர்ப்ப பையை இறக்கம் காணச் செய்யும். மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதுடன், அதன் தோலைக் காயவைத்துப் பொடி செய்து சாப்பிடுவதும் மேற்கண்ட பிரச்சினைகளை இயற்கை வழியில் சரிசெய்யும். சோயா, இரட்டை பீன்ஸ், புரக்கோலி, காலிஃபிளவர், தேங்காய், சோம்பு, மல்லித்தழை போன்றவை பெண்களின் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.