ஒரு வகையில், இது எச்சரிக்கையும்கூட. ஆனால், `அலட்சியமாகப் பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால், வருங்காலத்தில் கருத்தரித்தலில் தொடங்கி, புற்றுநோய்வரையிலான பல பாதிப்புகள் ஏற்படலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து, போதிய விழிப்புஉணர்வு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்லாமல், உரிய சிகிச்சையும் பெறாமல் தங்களுடைய உடல்நிலையை, மேலும் மேலும் கெடுத்துக்கொள்கிறார்கள். சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன, எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், இதற்கான முறையான சிகிச்சைகள் என்னென்ன?
“சினைப்பை நீர்க்கட்டிக்கான அடிப்படைக் காரணம், ஹார்மோன் சமச்சீரின்மைதான். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 11.6 கோடி பெண்கள், ஹார்மோன் சமச்சீரின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அறிகுறிகள்
பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெரியும். வயதைப் பொறுத்தும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தும் இவை அமையும்.
* முகம், மார்பு ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி காணப்படுவது
* தீவிரமான முடி உதிர்தல் பிரச்சனை
* சருமம் மற்றும் முடி சார்ந்த ஒவ்வாமைகள் ஏற்படுவது
* கர்ப்பப்பை விரிந்து அதில் சிறிது சிறிதாக நிறைய கட்டிகள் இருப்பது
* ஒழுங்கற்ற மாதவிடாய்
* கர்ப்பமாவதில் சிக்கல் உண்டாவது.
இவற்றோடு, உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தீவிரமான மனஅழுத்தமும் ஏற்படும்.
கவனிக்கத் தவறினால் ஏற்படும் பிரச்சனைகள்
* 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுக்கூடும். கர்ப்பமானாலும், கரு கலைந்துவிட வாய்ப்பிருக்கிறது.
* பி.சி.ஓ.எஸ் பிரச்னை இருந்தால், உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மையில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களைவிட, கர்ப்பிணிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* 30 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதயப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
* 40 வயதைத் தாண்டிய பெண் என்றால் சர்க்கரைநோய், இதயப் பிரச்சனைகள், உடலில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகமாவது, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
* பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் புரோஜெஸ்ட்ரான் (Progesterone) ஹார்மோன் சுரக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக, ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். நாட்பட, கர்ப்பப்பை பாதிப்பும் சேர்ந்துகொள்ளும். இது, கர்ப்பப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.