இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
சாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.