அலோபதி: இந்த வகை மருத்துவ முறைக்கு செவ்வாய் கிரகமே காரணமாக உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்கிற நிலையில் இருந்து யுத்தம் செய்யாமல் இருந்தால், அந்த நபரின் உடல் அலோபதி மருந்துகளை ஏற்றுக்கொள்ளும். செவ்வாய் கிரகமானது கடகம், மிதுனம், கன்னி ராசிகளைத் தவிர்த்து, எந்த ராசியில் இருந்தாலும் அந்த நபருக்கு அலோபதி மருந்துகள் ஏற்புடையதாக அமையும்.
சித்த மருத்துவம்: பழங்கால மருத்துவ முறையில், முத்தோஷ அடிப்படையில் மனித உடலை மூன்றாகப் பிரித்து மருத்துவம் செய்யப்படுகிறது. வாதம்- இவை காற்று உடல். பித்தம்- இவை அக்னி சூடு உள்ள உடல். சிலேட்டுமம் (கபம்) - இவை குளிர்ச்சியான உடல் அமைப்பு. இவையே அந்த மூன்று பிரிவு. சித்தாவில் நமது நாடிகளில் பேதத்தினால் அறியப்பட்டு நோய்க்கு உண்டான மருத்துவம் பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவ முறைக்கு குரு பகவான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒருவரது ஜாதகத்தில் குரு கிரகம் நல்ல நிலையில் இருந்தால், அவருக்கு நோய்கள் வருவது குறைவாகவே இருக்கும். உடல் திடகாத்திரமாக இருக்கும்.
ஆயுர்வேதம்: இந்தியாவின் வைத்திய சாஸ்திரம் மூலம் மருத்துவம் பார்க்கும் முறை இது. வேத காலம் முதல் நமது உடலை ஆராய்ச்சி செய்து விஞ்ஞான ஒப்புதலுடன் மருந்துகளை தயாரித்தனர். இந்த வைத்திய முறைக்கும் மூல காரணம் குரு தான். ஒருவரது ஜாதகத்தில் குரு நன்றாக அமைந்திருந்தால், ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
ஹோமியோபதி: இவ்வகையான மருத்துவம் நோயின் தன்மை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் வீரியமான மருந்துகள் கொடுப்பது ஆகும். சித்தா, ஆயுர்வேதம் மருந்துகளை, அதிக வீரியத்துடன் தயாரித்து அந்த மருந்துகளை நோய் உள்ளவர்களுக்கு கொடுத்து நோயை போக்குவதற்கு மருத்துவ முறை இது. இதற்கு செவ்வாய் கிரகமே காரணமாக அமைகிறது. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல முறையில் இருந்தால் இவ்வகையான மருத்துவ முறையை எடுத்துக்கொள்ளலாம்.
பாட்டி வைத்தியம்: இந்த வகையான வைத்தியம் எல்லாம் நமது முன்னோர்கள் கை வந்த கலையாக வைத்து இருந்தார்கள். இதனை வீட்டு வைத்தியம் என்றும் சொல்வார்கள். இது நமது வீட்டில் உள்ள இஞ்சி, பூண்டு, கீரைகள், சீரகம், மிளகு போன்ற அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு, சின்னச் சின்ன நோய்களுக்கு எல்லாம் வைத்தியம் பார்க்கும் முறையை கொண்டது. இந்த வைத்திய முறைக்கு புதன் கிரகம் காரணமாக உள்ளது.
அக்கு பஞ்சர்: மனித உடலில் உள்ள அக்கு என்னும் புள்ளிகளைக் கொண்டு நோய் தீர்க்கும் முறை இது. நமது உடலில் உள்ள நாடியை கொண்டு நமக்கு உள்ள நோய், வருங்காலத்தில் வரக்கூடிய நோய் போன்றவற்றை கண்டறிவார்கள். பின்னர் மயிரிழை போன்ற மெல்லிய ஊசி அல்லது கைவிரல் கொண்டு தோலில் உள்ள சக்தி வாய்ந்த அக்கு புள்ளிகளை அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் நோய்களை குணமாக்குவார்கள். இந்த மருத்துவ முறை அரசு அங்கீகாரம் பெற்றது. இதற்கு செவ்வாய் கிரகமே ஆதிக்கம் பெற்றுள்ளது.
ஹீலிங்: நமது இரு கைகளை உரசி, நமது உடலில் உள்ள வெப்பத்தை காந்த அலைகளாக உருவாக்கி, தொடு சிகிச்சை மூலம் நோய்களை குணமாக்கும் சக்தியே ‘ஹீலிங் முறை’. இதனை ‘தொடு சிகிச்சை முறை’ என்பார்கள். இது சீனாவில் புகழ்பெற்ற மருத்துவம். தற்காலத்தில் இந்தியாவிலும் பரவி வருகிறது.
மசாஜ்: இவை கேரளாவில் புகழ் பெற்றவை. நமது உடலில் மூலிகை எண்ணெய் கொண்டு தேய்த்து, நமது தசைகளை தட்டி நரம்புகள் எடுத்து, ரத்த ஓட்டம் சீர் செய்து உடலில் வலிகளை போக்குவார்கள். இதன் மூலம் உடல் உற்சாகத்தோடும், சுறுசுறுப்போடும் செயல்படத் தொடங்கும். மேலும் முதுமை அடைவதை தள்ளிப்போடும், இளமை நிலை தொடர, மூலிகை மருத்துவம் செய்கிறார்கள். இவ்வகையான சிகிச்சைக்கு குருவே காரணமாக உள்ளார்.