தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய 2 பேரும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள ரூ.33 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக திரட்டி வரும் நிலையில், தமிழக அரசு தன் பங்காக 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து விஷால் கூறும்போது, ‘380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்!