அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐதராபாத்தில் அரங்கு அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் நடக்கும் கதை என்றும், பிளாஷ்பேக்கில் ஒரு அஜித்குமார் வட சென்னை தாதாவாக வருவதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. எனினும் படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதேநேரத்தில் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் விஸ்வாசம் படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தான் விஸ்வாசம் படத்தில் நடிக்கவில்லை என்றும், காஞ்சனா 4 மற்றும் சித்தார்த் நடிக்கும் படத்தில் தான் நடித்து வருவதாக கபிர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Viswasam #AjithKumar