இதைத்தொடர்ந்து தற்கொலையை மர்ம சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். பிரதீப் தூக்கில் தொங்கிய அறையை போலீசார் சோதனை நடத்தியபோது தரையிலும், படுக்கையிலும் ரத்தக் கறைகள் இருந்தன. வீட்டில் இருந்த பொருட்கள் உடைந்து தாறுமாறாக சிதறி கிடந்தன. கண்ணாடிகளும் உடைந்து கிடந்தது. மேஜையில் மது பாட்டில்கள் இருந்தன.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து இருக்கிறது. பிரதீப் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பாவனி, வீட்டில் தங்கி இருந்த உறவுக்கார இளைஞர் ஷிராவண் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதீப்பும், பாவனியும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பாவனியும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார்.
பாவனியின் உறவுக்கார இளைஞரான ஷிராவண் என்பவரும் இரண்டு மாதங்களாக அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார். சமீபத்தில் பாவனி தனது வாட்ஸ் அப் முகப்பில் ஷிராவணுடன் சேர்ந்து இருப்பதுபோன்ற படத்தை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இது பிரதீப்புக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாவனி கூறும்போது, “பிரதீப்புக்கும் எனக்கும் அவ்வப்போது சிறுசிறு தகராறுகள் நடக்கும். சிறிது நேரத்தில் அதை மறந்து விடுவோம். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறார். அறைக்கதவை பூட்டி இருந்ததால் ஜன்னலை உடைத்தோம். அந்த கண்ணாடிதான் வீட்டில் சிதறி கிடந்தன” என்றார்.