சினிமா

இந்தி பட உலகை அதிர்ச்சியடைய வைத்த தனுஸ்ரீ தத்தா

மீ டூ கதைகளை படமாக்கும் தனுஸ்ரீதத்தாவின் நடவடிக்கையால் இந்தி பட உலகில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #MeToo

மாலை மலர்

இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ‘மீ டூ’வில் சிக்கி பட உலகை அதிர வைத்தனர். வில்லன் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக் இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் மீ டூவில் சிக்கினர்.

நடிகை கங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் விகாஸ் பாஹல் மீது பாலியல் புகார் கூறினார். மாதுரி தீட்சித், ஜுஹு சாவ்லா ஆகியோரை வைத்து ‘குலாப் கேங்’ படத்தை இயக்கிய சவுமிக் சென் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகை ஒருவர் கூறினார். தொடர்ந்து மூன்று பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.

பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் விருந்து நிகழ்ச்சியில், மதுவில் போதை பொருளை கலந்து தன்னை சீரழித்ததாக பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் மீடூ-வில் சொல்லப்பட்ட பாலியல் புகார்களை தனுஸ்ரீதத்தா குறும்படமாக எடுத்துள்ளார். இதற்கு ‘கார்டியன் ஏஞ்சல்’ என்று பெயரிட்டுள்ளார். “பட வாய்ப்பு தேடும் நடிகைகள் எப்படி பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன். இந்த குறும்படம் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார். இதனால் மீடூவில் சிக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.