சினிமா

ஊழலில் பீகாரை மிஞ்சிவிட்டது தமிழகம் : கமல்ஹாசன் ஆவேசம்

தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சி விட்டது. அந்த ஊழலில் சினிமா துறை சிக்கி தவிக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி, மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால் தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தியேட்டர் அதிபர்கள், திரையரங்குகளை காலவரையின்றி மூடி விட்டனர். தமிழ் திரையுலகம் ஸ்தம்பித்து நிற்கிறது.

தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியின் கிழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை பொறுத்தவரை சினிமா துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை.

தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரியை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கு விலக்கு அளித்துள்ளன. கேரள சினிமா துறையினர் அம்மாநில முதல்வரிடம் வரி விதிப்பு குறித்து வேண்டுகோள் வைத்தனர்.

அவர் உடனடியாக திரைப்படத்துறைக்கு இனி எந்த வரியும் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா அரசுகளும் சினிமா துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் சினிமாத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக்கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்.