சிவகார்த்திகேயன் 
சினிமா

ஓராண்டு காத்திருந்தும் பலனில்லை... வேறு வழியின்றி ஓ.டி.டி.க்கு செல்லும் சிவகார்த்திகேயன் படம்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த சிவகார்த்திகேயன் தயாரித்த படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாம்.

மாலை மலர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். 

இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.  

தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

வாழ் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ‘வாழ்’ படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.