சித்ரா 
சினிமா

சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்? - காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மாலை மலர்

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரிடம் சண்டையிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அவரை விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் சித்ராவின் தாயாரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.