சினிமா

இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா

இலங்கையில் இன்று 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு கொஞ்சம் முன்னரே தான் அங்கிருந்து புறப்பட்டதாக ராதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #SriLankaBlasts #RadikaaSarathkumar

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் திரண்டு இருந்த நிலையில், இன்று காலை 8.45 மணியளவில் அங்குள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் சுமார் 129 பேர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ராதிகா சரத்குமார், குண்டுவெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு கிளம்பியதன் மூலம் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.

இதுகுறித்து ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #SriLankaBlasts #RadikaaSarathkumar

SCROLL FOR NEXT