சினிமா

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

துபாயில் மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது. #Sridevi #RIPSridevi #SrideviDeath

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது...

" தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர்  ஸ்ரீதேவி.

தனது நான்காம் வயதில் `துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி தனது 13வது வயதில் `மூன்று முடிச்சு' படத்தின் மூலமாக கதாநாயகியானார். தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார், ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார். 

1983-ல் `ஹிம்மத் வாலா' ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் 'கனவுக்கன்னி'யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்தது. 1997-ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல்  `இங்கிலீஷ் விங்க்ளீஷ்' படத்தில் நடித்து மீண்டும்  நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார். 2013-ல் இந்திய அரசு அவருக்கு `பத்மஸ்ரீ' பட்டம் அளித்து கௌரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள், தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும், வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உட்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து, தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியானவர் ஸ்ரீதேவி. 

மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்படத் துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு, அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். "

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் சார்பில் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

" புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.  பல்வேறு மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்து பல வருடங்களாக தனது புகழை நிலை நாட்டியவர்  ஸ்ரீதேவி. சிறந்த தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர். 2013-ல் இந்திய அரசு அவருக்கு `பத்மஸ்ரீ' பட்டம் அளித்து கௌரவித்தது. தனது இயல்பான நடிப்பு திறனால் ரசிகர்கள் மனதை கவர்ந்த அவரது திடீர் மரணம், இந்திய திரைப்படத் துறைக்கு ஈடு செய்ய இயலாத மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அனைத்து உறுப்பினர்களும் துக்கத்தில் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் "

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. #Sridevi #RIPSridevi #SrideviDeath