சினிமா

ஸ்ரீதேவி மறைவு - இயக்குநர் பாரதிராஜா இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். #Sridevi #RIPSridevi #sridevideath

மாலை மலர்

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகை ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்ததாக தகவல் வெளியானது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜாவும் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

எனது மனம் பழைய நினைவுகளுக்கு செல்கிறது. 1977 என்று நினைக்கிறேன். அப்போது முதல் முறையாக ஸ்ரீதேவியை பார்த்தேன். அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தவர். பெரிய கல்லூரிக்கு சென்று படித்த பெண் இல்லை அவர். ஆனால் எதை சொன்னாலும் அதை உள்வாங்கி பிரதிபலிக்கும் சக்தி அவருக்கு உள்ளது. 3 படம் அவரை வைத்து இயக்கி உள்ளேன். அந்த படங்களில் எல்லாம் அவரது சிரிப்பு நமது கண்ணை விட்டு போகாது. அவரது பார்வையும் அப்படித்தான். நல்ல பெண் கலைஞர் அவர். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு நிறைய பேர் சென்றுள்ளனர். ஆனால் ஜெயித்து உச்சத்துக்கு போனவர் ஸ்ரீதேவி மட்டும்தான்.

அவரை இந்தியில் நான் அறிமுகம் செய்தது எனக்கு பெருமை. 16 வயதினிலே படத்தை இந்தியில் எடுத்தேன். அவர் இந்தியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னார். அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். அதன் பிறகு அவர் தனது சொந்த முயற்சியில் பிரமாண்டமாக வளர்ந்தார். அவர் மரணம் அடைந்த செய்தி கஷ்டமாகத்தான் இருக்கிறது.

சென்னையில், மும்பையில் எங்கு பேட்டி கொடுத்தாலும் பாரதிராஜா தான் என்னை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வார். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்று சொல்வார். அது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கும். ஒரு இழப்பு என்பது சாதாரண இழப்பு இல்லை. ஸ்ரீதேவி உச்சத்துக்கு போய் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மிகப்பெரிய நடிகை. அவர் இறந்தது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. #Sridevi #RIPSridevi #sridevideath