ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் ஒரு டாக்டர் மகள் ஒரு பேராசிரியர் மகள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை.
மூட்டை தூக்கும் தொழிலாளி மகள் 1176 மதிப்பெண்கள் எடுப்பது இமாலய சாதனை.
பத்தாயிரத்தில் ஒரு ஏழைப் பெண்ணால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும்.
குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது. உண்ண நல்ல உணவு கிடையாது, உடுத்த கெளரமான உடை கிடையாது. படுக்க நல்ல பாய் கிடையாது.
காடா விளக்கில் படித்து விடியும் முன்பும், இருட்டிய பின்பும் மட்டும்,இயற்கை உபாதையை கழிக்க செடி கொடி மறைவில் ஒதுங்கி வாழும், அனிதா போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெரும் படிப்பு படிக்கக் கூடாதா ?
டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ்., கனவு காணக் கூடாதா? ஏழைகள் எத்தனை தலைமுறை ஆனாலும் ஏழைகளாகவே வெந்து நொந்து சாக வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறதா?
மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படிப்பவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே இந்த நீட் தேர்வு.
சென்னையில் தனியார் பள்ளியில் லட்சங்கள் கல்விக் கட்டணமாகக் கட்டி படிக்கும் மாணவன் திறமையும் எட்டாம் வகுப்பு வரை தேர்வு என்றால் என்னவென்றே தெரியாமல் பின் 11-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன் திறமையும் ஒன்றாக இருக்குமா ?
ஒரே நாடு சரி. ஒரே மொழி, ஒரே மதம் இந்தியாவில் சாத்தியமா ? நாடு முழுவதிலும் பல்வேறு தரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து தயார் செய்யும் வரை நீட் தேர்வு இப்படி அப்பாவி அனிதாக்களை காவு வாங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?