சினிமா

சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு

சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.

இந்த விழா மிகவும் மகிழ்ச்சிகரமானது. எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். கமலும், ரஜினியும் ஒன்றாக இருக்கிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா. சரத்குமாரும், நாசரும் அருகருகே இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு.

கமலுடன் அமைச்சர் ஜெயக்குமார் கைகுலுக்குகிறார். எல்லோரது முகத்திலும் புன்னகை தவழ்கிறது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் அழைத்ததும் திறப்பு விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் வந்து இருக்கிறார். நடிகர் திலகத்தின் பெருமையை அவரது குடும்பத்தினர் கட்டிக்காத்து வருகிறார்கள்.

அவரது வசனத்தை பேசிதான் பலர் நடிப்பதற்கே வந்தனர். பராசக்தி வசனத்தை பேசிதான் நான் எஸ்.பி.முத்துராமனிடம் வாய்ப்பு கேட்டேன். நடிப்பு துறைக்கு வருபவர்களுக்கு பாலபாடமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஜயகுமார் பேசும் போது, கலை என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் நடிகர் திலகம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் புகழப்படுவர் என்றார்.