சினிமா

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும்: நடிகர் சங்கம் வேண்டுகோள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாலை மலர்

சிவாஜிகணேசன் வெறும் நடிகர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். இன்றளவும் அவருடைய தாக்கமில்லாத நடிகர்கள் அரிது, அழகு தமிழினை அனைவர்க்கும் கொண்டு போய் சேர்த்த கலாச்சாரக் குறியீடு, நடிப்புக் கலைக்கவர் இலக்கணம் வகுத்தவர். கலைக்காக அவர்தம் பணியினை அடையாளங்கண்டு பிரஞ்சு அரசாங்கம் தன் உயரிய விருதான “செவாலியே” வை அவற்களித்து கௌரவித்தது. உலகம் போற்றும் அக்கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போது, மிகச் சிறப்பான விழாவாக அமைய வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கனவு.

அந்தக் கனவு முழுமையாக நனவாவது, முதலமைச்சர் அவர்களே திறந்து வைப்பதேயாகும். அதுவே அக்கலைச் சிகரத்திற்கு சரியான, தகுதியான மரியாதையாகும்.

புரட்சித் தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழாக்காலத்தில் அவர் தனக்கு இணையாக போற்றிய சிவாஜிக்கு சரியான மரியாதை கிடைக்க வேண்டுமென்பதே வேண்டுதல்.

சிலை அகற்றப்படும்போதே அது அதிகமான மக்கள் வந்துசெல்லும் இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்கிற உணர்ச்சிகரமான தீர்மானத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றி அதன் சாரத்தை அன்றைய முதல்வரிடம் கடிதமாகவும் கொடுக்கப்பட்டது.

மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் தன் மனதிற்கு நெருக்கமான விஷயமாக, சிவாஜிக்கு மணிமண்டபம் எழுப்புவது, அதை கோலாகலமான விழாவாக்குவது என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார்…

அவர் இருந்திருந்தால் தம் பொற்கரங்களாலேயே திறந்து வைத்திருப்பார். இச்சூழலில் மாண்புமிகு முதலமைச்சர் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரியது. இதுவே ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் உணர்வும், குரலும், எதிர்பார்ப்பும், இக்கருத்தின் அடிப்படையிலேயே மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் கடிதம் கொடுக்க அறக்கட்டளை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.