சினிமா

சர்கார் வழக்கில் சமரசம் - நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. #Sarkar #Vijay #ARMurugadoss

மாலை மலர்

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள `சர்கார்' என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும், வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையையும், தற்கால அரசியலையும் கருவாக வைத்து இந்த படத்தை எடுத்து இருப்பதாக ஏ.ஆர். முருகதாஸ் தெளிவுபடுத்தி இருந்தார்.

இந்த நிலையில், சர்கார் படத்தின் மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை காண இயக்குநர் பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்திற்கு தடை கேட்டு வருண் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சுந்தர் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay #ARMurugadoss