தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி தற்போது தில் ராஜு புரொக்ஷன்ஸ் சார்பில் நானி ஜோடியாக ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `காற்று வெளியிடை' படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்த சாய் பல்லவி, அடுத்ததாக விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திலும் நடிக்காமல் அதனை தட்டிக்கழித்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கவிருந்தார். இந்நிலையில், அதற்கு முன்னதாக பெண்களை மையக்கருவாக கொண்ட கதை ஒன்றை விஜய் இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திலும் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு `கரு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.