நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான், சாய்பல்லவி நடித்துள்ள காதல் படம் ஏக் தின். இப்படத்தை சுனில் பாண்டே இயக்கியுள்ளார். அமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
ஜப்பானில் நடக்கும் ஒரு விபத்தில் சாய் பல்லவிக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு மற்றும் அவரை ஒரு நாள் காதலராக மாற்றும் ஜுனைத் கானின் உணர்வுப்பூர்வமான பயணமே இப்படத்தின் கதை.
இது சாய் பல்லவி இந்தியில் அறிமுகமாகும் முதல் படமாகும். இப்படம் மே.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான அமீர்கான்,
“இப்படத்தில் சாய் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். நீங்கள் நிச்சயம் பிரமித்துப்போவீர்கள். என் மனதிலிருந்து சொல்வதென்றால், இன்று நம் நாட்டில் இருக்கும் சிறந்த நடிகை சாய் தான் என்று நான் உணர்கிறேன். ஜுனைத்தும் நன்றாக நடித்திருக்கிறார், ஆனால் அவர் என் மகன் என்பதால் என்னால் அதிகம் சொல்ல முடியாது.
ஒரு தயாரிப்பாளராக, 'ஏக் தின்' படத்தில் ஒவ்வொருவரும் காட்டிய தீவிரத்திற்கும், நேர்மைக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். இதில் அர்ஜித் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியும், அவர் மிக நன்றாகப் பாடுவார். ஆனால் ராம் மிகச் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார்.” என தெரிவித்தார்.