சினிமா

நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்

`தியா' படத்தில் தன்னுடன் நடித்த நாகசவுரியா மட்டுமின்றி, வேறு எந்த நடிகருடனும் தனக்கு மோதல் இல்லை என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார். #Diya #SaiPallavai

இந்த படத்தின் கதாநாயகன் நாகசவுரியாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நாகசவுரியா கூறும்போது, “படப்பிடிப்பில் சாய் பல்லவி நடந்து கொண்ட விதம் சகிக்க முடியாததாக இருந்தது. சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோபித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்” என்றார்.

இதற்கு சாய்பல்லவி ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து சாய்பல்லவி கூறியதாவது:-

“நாகசவுரியாவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்பில் எனது கதை, கதாபாத்திரம் பற்றி மட்டுமே யோசிப்பேன். அதை வீட்டில் வந்து 10 விதமாக நடித்து பயிற்சியும் எடுப்பேன். மற்றவர்களை பொருட்படுத்துவது இல்லை. டைரக்டரிடம் மட்டும் எனது நடிப்பு குறித்து விவாதிப்பேன். நான் நாகசவுரியாவிடம் பேசாமல் இருந்ததால் ஒருவேளை என்னை அவர் தவறாக புரிந்து இருக்கலாம். என்னால் யாரும் காயப்பட கூடாது என்று நினைப்பேன்.

நாகசவுரியா சிறந்த நடிகர். படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார். என்மீது புகார் கூறிய பிறகு அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவருடன் பேச முடியவில்லை. நாகசவுரியா மட்டுமின்றி வேறு எந்த நடிகருடனும் எனக்கு மோதல் எதுவும் இல்லை.

நான் டாக்டருக்கு படித்து இருக்கிறேன். டாக்டர் தொழில் செய்ய வேண்டும் என்று எனக்கு எப்போதாவது ஆசை வந்தால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்”.

SCROLL FOR NEXT