சினிமா

பத்மாவத் படத்தில் ரணகளப்படுத்திய ரன்வீர்சிங் - ரசிகர்கள் உற்சாகம்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாகித் கபூர் - தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பத்மாவத்' படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு ரணகளப்படுத்தும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் `பத்மாவத்' படம் வடஇந்திய மாநிலங்களில் இன்று வெளியாகிறது. தமிழில் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்தியில் பத்மாவத் படத்தை பார்த்த ரசிகர்கள் ரன்வீர் சிங்கின் நடிப்பை பாராட்டித் தள்ளியுள்ளனர்.  

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அந்த படம் முழுக்க அவர் நிறைந்துள்ளார். அவர் உடல் கட்டமைப்பும், வசன உச்சரிப்புகளும் ரசிகர்களிடம் மிப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ரன்வீர்சிங் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துள்ள போதிலும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தரும். அந்த அளவுக்கு அலாவுதீன் கில்ஜியாகவே ரன்வீர்சிங் மாறியுள்ளார். மிகச் சிறந்த வில்லத்தனத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

பத்மாவத் படத்தில் சித்தூர் ராணி பத்மினியாக நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனே மீது கர்னி சேனா அமைப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர். தீபிகா படுகோனே தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று கர்னி சேனா அறிவித்தது. இதனால் நடிகை தீபிகா படுகோனேக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பத்மாவத் படம் ரூ.200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டில் நடந்த கதை என்பதால் அந்த காலத்துக்கு ஏற்ப படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தில் அந்த கால பிரமாண்டங்களைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT