சினிமா

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார்.

மாலை மலர்

கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசினார்.

“சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள்” என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்பிறகு 2.0, காலா படங்களில் அவர் பிஸியாகி விட்டார். தற்போது அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.

அடுத்து புதிய படத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அரசியலுக்கு வருதற்காகவே படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி இருக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இந்நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

வரும் டிசம்பர் 26ம் தேதியில் இருந்து, டிசம்பர் 31ம் தேதி வரை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க இருக்கிறார். ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து பேசுவார் என்றும், சந்திப்பு முடிந்ததும் அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.