மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிப்பு காட்சி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பரவியது.
நடிகை பிரியா பிரகாஷ் புருவத்தை வில்லாக வளைத்து கண்ணடிப்பது போன்று வரும் காட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த படத்தில் வரும், “மாணிக்கிய மலராய பூவி” என்ற பாடல் இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து இந்த பாடலை எதிர்த்து கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நடிகை பிரியாவுக்கு ஆதரவாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 2 பேர் இந்த படப்பாடல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், “ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடல் முகம்மதுவையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிபடுத்துவது போல உள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வை பாதிக்கும் அந்த பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதற்கு படத்தின் இயக்குனர் ஓமர்லூலு கூறியதாவது:-
வடகேரளாவில் மல்பாரில் உள்ள முஸ்லிம்கள் இந்த பாடலை 1978-ல் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டுகளாக பாடி வருகிறார்கள்.
அவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருமண விழாக்களில் கூட இந்த பாடலை பாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த பாடலை இப்போது திடீரென ரத்து செய்ய சொல்வது ஏன்?” என்று கேட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.