திலீப்புக்கு ஆலுவா கோர்ட்டு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது. தற்போது தான் நடித்து பாதியில் நிற்கும் மலையாள படங்களில் நடிக்க போவதாக நடிகர் திலீப் அறிவித்துள்ளார். இதற்கான பூர்வாங்க பணிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடிகர் திலீப்பின் வீட்டிற்கு 9-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் திடீரென்று சென்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு அந்த கார்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
இந்த தகவல் கிடைத்ததும் நிருபர்கள் அங்கு திரண்டனர். ஆனால் அவர்களை திலீப்பின் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதைதொடர்ந்து ஆலுவா புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜை தொடர்புகொண்டு நிருபர்கள் அதுபற்றி கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் திலீப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டிற்கு வந்து சென்ற சொகுசு கார்களில் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த கார் கோவாவை சேர்ந்த ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. அதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஜாமீன் நிபந்தனை மீறப்பட்டு உள்ளதா? என்றும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனக்கு மிரட்டல் உள்ளதாக நடிகர் திலீப் இதுவரை போலீசில் எந்த புகாரும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.