சினிமா

புதுவையில் 30-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறப்பு

புதுச்சேரியில் கேளிக்கை வரியை குறைப்பதாக அரசு உறுதி அளித்ததால் வருகிற 30-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம்-புதுவையில் கடந்த 16-ந்தேதி முதல் சினிமா காட்சிகளை ரத்து செய்து தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தியேட்டர் உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கு போராட்டம் கைவிடப்பட்டு தியேட்டர்கள் இயங்கி வருகின்றன.

ஆனால், புதுவையில் உள்ள தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மாநில அரசு சார்பில் விதிக்கப்படும் 25 சதவீத கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் இந்த போராட்டம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது கேளிக்கை வரியை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அப்போது கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று வருகிற 30-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.