சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி: கமல்ஹாசன், சக்திக்கு வக்கீல் நோட்டீஸ்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஈடுபட்ட சக்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை அவமதித்துள்ளதாக, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கம் குற்றம்சாட்டி, வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசை வக்கீல் துரை குணசேகரன் என்பவர் அனுப்பியுள்ளார். விஜய் டி.வி.யின் தென்னிந் திய நிர்வாக இயக்குனர், கமல்ஹாசன், நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் சக்தி (இயக்குனர் பி.வாசுவின் மகன்), இந்த நிகழ்ச்சியை தயாரித்துள்ள ‘என்டமோல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூலை 14-ந்தேதி ஒளிபரப்பப்பட்டது. அதில், நடிகர் சக்தி நாதஸ்வர வித்வானாக நடித்தார். அப்போது, தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை ஆணவமாக சக்தி கையாண்டார். அந்த நாதஸ்வரத்தை உணவு அருந்தும் மேஜையில் வைத்து அவமதித்தனர். அதாவது, அந்த நாதஸ்வரத்தை தூக்கி போட்டி பிடித்துக் கொண்டு செயல்பட்டார். இது இசை வேளாளர் சமுதாயத்தினரின் நம்பிக்கையையும், தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத் தையும் அவமதிக்கும் விதமாக உள்ளது.

இசை வேளாளர்கள், நாதஸ்வரத்தை தெய்வீக இசை கருவியாக பாவித்து வருகின்றனர்.

அந்த கருவியின் முகப்பு பகுதியை சூரியக் கடவுளாகவும், காற்றை ஊதும் பகுதியை பெண் தெய்வமான சக்தியாகவும், நாதஸ்வரத்தில் உள்ள 7 ஓட்டைகளை சப்த கன்னிகளாகவும், அந்த நாதஸ்வரத்தில் இருந்து வரும் இசையை, சிவன் கடவுளாகவும் இசை வேளாளர்கள் பாவித்து வருகின்றனர்.

இந்த நாதஸ்வரத்தை தினமும் பூஜை செய்வது, ஊதுபத்தியை கொளுத்தி வழிப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட தெய்வீக இசை கருவியை ஆணவமாக பயன்படுத்திய நடிகர் சக்தி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும்.

பொது மன்னிப்பு கேட்பதாக தமிழ், ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்யவேண்டும். விஜய் டி.வி.யிலும் அதை ஒளிபரப்பவேண்டும். இதை செய்யவில்லை என்றால், கமலஹாசன் உள்ளிட்டோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT