தரவரிசை

தீயோர் கூடம்– விமர்சனம்

இயக்குனர் ஒரு சாதாரண மனிதன் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொள்வதை மையமாக கொண்டு கதை சொல்ல முயற்சி செய்துள்ளார்.

மாலை மலர்

ஒரே ஒரு நாள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை என்பதைக் கொண்டு நகரும் கதைகளில், கதாபாத்திரங்கள் பற்றி அதிக தகவல் தெரியாது. யாராக இருந்தாலும் எதையும் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும். அதுபோன்ற ஒரு கதைக்களத்தில் உருவான படம் தான் தியோர் கூடம்.

உணவு டெலிவரி வேலை செய்யும் டேனி, ஒரு வீட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார். அங்கே சில மர்மமான நபர்களுடன் சேர்ந்து, “ராபின் ஹூட்” போல பணத்தை திருடி, அதை தனது அனாதை இல்லத்திற்காக பயன்படுத்த நினைக்கும் நாயகி சாக்ஷி அகர்வால் இருக்கிறார். சில சூழ்நிலைகளால் டேனி மற்றும் சாக்ஷி இணைந்து பணத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் அதன் பின்னர் நிகழும் திருப்பங்களே கதையை முன்னேடுக்கிறது.

டேனி மற்றும் சாக்ஷி அகர்வால் தங்களுக்கான கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர். சாக்ஷி கதாபாத்திரம் ஆரம்பத்தில் ஒரு நல்ல நோக்கத்துடன் இருப்பது போல இருந்தாலும், சில இடங்களில் அந்த நிலைத்தன்மை குறைவாக தெரிகிறது. வையாபுரி மற்றும் ஜாவா சுந்தரேசன் காட்சிகள், சீரியஸாக இருந்தாலும், சில இடங்களில் தவறுதலாக நகைச்சுவையாக மாறுகிறது.

இயக்குனர் சக்திவேல், ஒரு சாதாரண மனிதன் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொள்வதை மையமாக கொண்டு கதை சொல்ல முயற்சி செய்துள்ளார். முதல் பாதியில் திருப்பங்கள் நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவை குறைந்து, முன்னரே எதிர்பார்க்கக்கூடிய நிலைக்கு கதை செல்கிறது. பல திருப்பங்கள் தற்செயலாக நடப்பது போல உணர்வு வருகிறது.

படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் சில திருப்பங்கள் சுவாரஸ்யமாக வேலை செய்கிறது. கதாபாத்திரங்களின் உண்மை முகம் மற்றும் அவர்களின் நோக்கம் மெதுவாக வெளிப்படுகிறது. ஆனால் அவர்களின் தனிப்பட்ட ஆழம் குறைவாக இருப்பது தெரிகிறது.

படத்தின் நேரம் குறைவாகவும், காட்சிகள் வேகமாக நகர்வதும் ஒரு பிளஸ். சில நல்ல டுவிஸ்ட் மற்றும் சில இடங்களில் வரக்கூடிய லேசான நகைச்சுவை படத்தை சலிப்பில்லாமல் நகர்த்துகிறது.

பிரசாத் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதுபோல், இசை பேட்டை வசந்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.