குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை அழுத்தமாக பேசுவதும், பெற்றோர் குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் படத்தின் பலம்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவி தேஜா, மனைவி பிரியா பவானி சங்கர், மகள் நட்சத்திரா ஆகியோருடன் வாழை சாகுபடி செய்து வாழ்ந்து வருகிறார். குடிகாரராக இருந்தாலும் மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட அவர், பெண்கள் தங்கள் பிரச்சனைகளை தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் மகளை வளர்க்கிறார்.
பள்ளியில் சில குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலையில், மகள் நட்சத்திரா தனது தந்தையிடம் அதைப் பற்றி தெரிவிக்கிறார். இதையடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து பழிவாங்க ரவி தேஜா களம் இறங்குகிறார். இதைத் தொடர்ந்து நடந்தது என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.
மகள் மீது பாசம் கொண்ட முரட்டு தந்தையாக ரவி தேஜா தனது உடல்மொழி, ஆக்ரோஷம் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் இயல்பான நடிப்பை வழங்க, சிறுமி நட்சத்திரா துறுதுறுப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சாய்குமார், அஜய் கோஷ், சுவாசிகா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றனர்.
விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு ஐயப்பன் கோவில் காட்சிகளையும் மலைப்பயணத்தையும் அழகாக பதிவு செய்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் உணர்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை அழுத்தமாக பேசுவதும், பெற்றோர் குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் படத்தின் பலம். முதல் பாதியின் இயல்பான கதையோட்டம் ரசிக்க வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அதிகப்படியான சென்டிமெண்ட் மற்றும் சில திடீர் திருப்பங்கள் படத்தின் வேகத்தை சற்று குறைக்கின்றன.
மொத்தத்தில், தந்தை–மகள் பாசத்துடன் சமூகப் பிரச்சனையையும் இணைத்திருக்கும் ‘இருமுடி கட்டு’, ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படைப்பு.