செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் நிரபராதியின் வலிகளுடன், உணர்வுகளுடன் சிக்கி தவிக்கும் சாதாரண மனிதனின் மானத்திற்கு என்ன விலை? என்பதை வசனங்களோடு மட்டுமின்றி கேரக்டர்களின் வழியாக உயிரோட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சஞ்சீவ் பழூர்.
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லரைக் காசுகளை நீருக்கடியில் நீந்தி சென்று சேகரித்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார் கருணாஸ். அப்படி ஒரு நாள் கடலில் சில்லரை காசுகளை தேடும் போது அவரது கையில் விலை உயர்ந்த ஆபரணம் கிடைக்கிறது. கிடைத்த ஆபரணத்தை கருணாஸ் போலீசில் நேர்மையோடு ஒப்படைக்க அதில் இருந்து அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாகி தாங்க முடியாத சிக்கல்களை சந்திக்கிறார்.
சிக்கலில் அவர்பட்ட வலிகளோடும், உணர்வுகளோடும் அவர் மீண்டாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் நிரபராதியின் வலிகளுடன், உணர்வுகளுடன் சிக்கி தவிக்கும் சாதாரண மனிதனின் மானத்திற்கு என்ன விலை? என்பதை வசனங்களோடு மட்டுமின்றி கேரக்டர்களின் வழியாக உயிரோட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சஞ்சீவ் பழூர்.
தான் உண்டு தனது குடும்பம் உண்டு என்று வாழ்ந்து எந்த ஒரு தவறு செய்யாமல் குற்றவாளியாக நிற்கும் காட்சிகளில் அப்படியே படத்தின் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ள கருணாஸ் மாறுபட்ட பரிமாணத்தை நேர்த்தியாக கொடுத்துள்ளார். உடல்மொழியோடு அவர் பேசும் வசனங்களும் நடிப்புக்கும் தேசிய விருது தேடி வரும் அளவுக்கு அமைந்துள்ளது.
படத்தின் இன்னொரு பெரிய பலம் நிமிஷா சஜயன். வழக்கறிஞர் காஞ்சனா கேரக்டரில் கருணாசுக்காக வாதிடும் காட்சிகளில் மிரள வைக்கிறார். தனி மனிதனின் வாழ்க்கைக்கு வழக்கின் மூலம் அவர் நியாயம் கேட்கும் காட்சிகள் அரங்கில் நிசப்த உணர்வு. விஜயலட்சுமி வீரமணி, ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கமலேஷ் ஜெகன், லொள்ளு சபா, சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம்.
படத்தின் உணர்வுப்பூர்வ காட்சிகளுக்கும் கடல் காட்சிகளுக்கும் சாம் சி.எஸ். இசை உயிரோட்டமாக உள்ளது. ராமேஸ்வரத்தின் பின்னணியை கதைக்கு தகுந்தார்போல் காட்சிப்படுத்தி உள்ள ஆல்பா ஆண்டனி ஒளிப்பதிவு சிறப்பு. சாதாரண மனிதனின் உண்மைக்கும், நேர்மைக்கும் என்ன விலை என கேட்கும் யதார்த்த படைப்பு.