சினிமா

இரவில் சுடுகாடு வரை ஓடிய மொட்டை ராஜேந்திரன் - அதிர்ச்சியடைந்த படக்குழு

ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மோகனா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் மொட்டை ராஜேந்திரன் இரவில் சுடுகாடு வரை ஓடி படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். #Mohana

ஆர்.வடிவேலனின் மோரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன் இணைந்து நடிக்கும் காமெடி கலந்த பேய் கதையை ‘மோகனா’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

இந்தப் படத்தை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஆர்.ஏ.ஆனந்த் இயக்கி இருக்கிறார். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதையில் 1980-ஆம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் நடந்த, பேய் சம்பந்தப்பட்ட உண்மையான சம்பவங்களை இணைத்து திகிலூட்டும் வகையில், படமாக்கி இருக்கிறார்கள். 

இந்தப் படத்தில் ஊர் பண்ணையாராகவும், பெண் பித்து பிடித்தவராகவும் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் பேயாக நடிக்கும் கல்யாணி நாயரை, பேய் என்று தெரியாமல் அவரை அடைவதற்காக தனது பங்களாவில் இருந்து, பக்கத்தில் இருக்கும் சுடுகாடு வரை துரத்திக் கொண்டு போய், கட்டிப்பிடித்து அணைக்கும் காட்சியை எடுத்திருக்கிறார்கள். இந்தக் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் போது, உண்மையிலேயே மொட்டை ராஜேந்திரன் சுடுகாடு வரை ஓடிவிட்டார். அப்போது அவர் கல்யாணி நாயர் என்று நினைத்துக் கொண்டு சுடுகாடு வரை ஓடினார். பின்னர் தான் தெரிந்தது கல்யாணி நாயர் செட்டில் தான் இருந்துள்ளார் என்பது. இதனால், உண்மையில் மொட்டை ராஜேந்திரன் மட்டுமில்லை, படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட அனைவருமே பயந்துவிட்டார்கள். 

அதேபோல் கிராமத்து கோயில் விழாவிற்காக இரவில் நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த நாடகத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் - கல்யாணி நாயர் நடித்துக் கொண்டிருக்கிறார். கதைப்படி கல்யாணி இறந்து போன பெண் பேயாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல், அவருடன் பயமில்லாமல் நடிக்க வேண்டும். இந்தக் காட்சியில் நடிக்கும்போது, அந்தப் பெண் பவர்ஸ்டார் சீனிவாசனை கட்டிப்பிடித்து, இறுக்கமாக முத்தம் கொடுக்க நெருங்கி வர உண்மையிலேயே பவர் ஸ்டார் சீனிவாசன், என்னை காப்பாற்றுங்கள் என்று அலறிவிட்டார். பின்னர் படக்குழுவினர், அந்தப் பெண்ணிடம் இருந்து பவர் ஸ்டாரை காப்பாற்றினார்கள். அதன்பிறகு தான் தெரிந்தது, அந்த ஊரில் இறந்து போன பெண் பேயாக வந்து, கல்யாணி நாயர் உடம்பில் இறங்கி, பவர்ஸ்டார் சீனிவாசனை பயமுறுத்தி இருக்கிறார் என்று. 

இதில், கல்யாணி நாயர், மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், தவசி, அஸ்மிதா, கிங்காங், ஹரிஸ், மும்பை சீனுஜி, உமா, மோரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

எல்.ஜி.பாலா இசையமைத்திருக்கும் இந்த படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Mohana

SCROLL FOR NEXT