கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகானிடம் இதுபற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-
கமல்ஹாசன் கூறிய கருத்தில் தவறு இல்லை. அவருடைய கருத்தை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் முதல்-அமைச்சர் மட்டும் பதவி விலகினால் போதுமா? அவரை நியமித்தவரையும் 420 என்கிறார்கள்.
தற்போது மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் மக்கள் நலன்பற்றி அக்கறைப்படவில்லை. எனவே மாநில அரசு மட்டு மல்ல மத்திய அரசும் பதவி விலக வேண்டும்.
தமிழக மக்களின் நலன் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது. கோரிக்கைகளுக்காக போராடும் விவசாயிகளை கைது செய்கிறார்கள். ஆனால் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசும் பிரதமர் இது விவசாயிகளின் அரசு என்கிறார். நீட்தேர்வு மூலமும் இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்குகிறார்கள்.
இலங்கை தமிழர்களை அழித்தவர்கள் இந்திய மீனவர்களின் உரிமையையும் பறிக்கிறார்கள். இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழக விவசாய பூமியில் எண்ணை கிணறுகளை அழைத்து தமிழ்நாட்டை பாலைவனமாக்க பார்க்கிறார்கள். பிற மாநில மக்களை நாம் மதிக்கிறோம். ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கூட தமிழ் எழுத்துக்களை அழிக்கிறார்கள். இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
நாட்டை ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எனவே இனி கட்சி சாராத மக்கள் பிரதிநிதிகளை அந்தந்த பகுதியில் இருந்து மக்களே தேர்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தின் 234 எம்.எல்.ஏ.க்களும், 40 எம்.பி.க்களும் கட்சி சார்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சரும் கட்சி சார்பு இல்லாதவர்களாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும்.
நாட்டுக்கு தேவையான நதிகள் இணைப்பு நடைபெறவில்லை. தமிழ் மாணவர்களை சங்கடப் படுத்தும் நீட்தேர்வுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. விவசாயத்தை பாதுகாக்க, தண்ணீர் சேமித்து வைக்க யாரும் முன் வரவில்லை.
கமல் போன்றவர்கள் கருத்துக்களை மட்டும் தெரிவித்தால் போதாது. நதிகள் இணைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு மக்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். நான் கமல் ரசிகன்தான். ஆனால் அவர் இதுவரை பொது பிரச்சினைகளில் களம் இறங்கியது இல்லை. ரஜினியும் இதில் கவனம் செலுத்தவில்லை. இனியாவது மக்கள் பிரச்சினைகளில் இருவரும் இணைந்து போராட முன் வர வேண்டும். ஊழல் இல்லாத தமிழகமும், நாடும் தேவை. இதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.