சினிமா

காதல் சண்டையும், கபடி சண்டையும் சேர்ந்து உருவான `அருவா சண்ட'

ஆதிராஜன் இயக்கத்தில் ராஜா, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி வரும் `அருவா சண்ட' படம் காதல் சண்டையும், கபடி சண்டையும் மையப்படுத்தி உருவாகி இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் குறித்து இயக்குநர் ஆதிராஜன் கூறியதாவது, சுருக்கமாகச்  சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன. இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை. கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ள அத்தனை பேரையும் உலுக்கும் படியாக இருக்கும். 

அதே போல வீரத்தமிழனின் தேசிய அடையாளம் கபடி. பட்டித்தொட்டியில் மட்டுமல்ல சிட்டியிலும் இளைஞர்களின் விருப்பமான வீர விளையாட்டாக இருந்து வருகிறது. ஐ.பி.எல் கிரிகெட்டை போல, இன்று நாடு முழுவதும் பிரபலமாகி வரும் `புரோகபடி' தேசிய அளவில் கபடி வீரர்களால் பணத்தையும், புகழையும், அங்கீகாரத்தையும் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கபடி வீரர்களின் லட்சியங்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் `அருவாசண்ட' படம் அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்றிராத வேடத்தில் உருக்கமாக நடித்திருக்கிறார். காட்சியமைப்பும், வசனங்களும் உயிர்ப்புடன், உணர்ச்சிப்பூர்வமாக இருக்கின்றன என்று சரண்யா பொன்வண்ணன் படப்பிடிப்பின்போது பாராட்டினார். முக்கிய வேடத்தில் ஆடுகளம் நரேன், சவுந்தர்ராஜா, காதல் சுகுமார், மதுரை சுஜாதா ஆகியோர் நடித்துள்ளனர் என்றார்.

இதில் கபடி வீரர் ராஜா நாயகனாக நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, இயக்குனர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், விஜய் டிவி சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

தரண் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.