சினிமா

கவுதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார்

‘நரகாசுரன்’ படம் விவகாரத்தில் கவுதம் மேனன், கார்த்திக் நரேன் மோதலையடுத்து கவுதம் மேனன் அறிக்கை வெளியட்டிருந்த நிலையில், கவுதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார் கூறியிருக்கிறார். #NaragaSooran

மாலை மலர்

அரவிந்தசாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நரகாசுரன். இந்த படத்தை தயாரித்த கவுதம் மேனன், இயக்குநர் கார்த்திக் நரேன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. படக்குழுவினரை கவுதம் மேனன் குப்பைபோல் நடத்தியதாகவும் நரகாசுரன் படத்துக்கு வாங்கிய தொகையை வேறு படங்களுக்கு செலவிட்டு, பட வேலைகளை முடக்கியதாகவும் கார்த்திக் நரேன் குற்றம் சாட்டினார்.

இதனை கவுதம் மேனன் மறுத்தார். படத்தில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறேன். சிலர் பேச்சை கேட்டு கார்த்திக் நரேனுக்கு கோபம் வந்துள்ளது என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கவுதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“கவுதம் மேனன் சினிமா துறையில் மூத்தவர். அவர் தயாரிக்கும் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களின் பட்ஜெட் நரகாசுரனை விட பல மடங்கு அதிகம் என்பது உண்மைதான். நரகாசுரன் படத்துக்கு பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு முதலீடு செய்யவில்லை என்று கவுதம் மேனன் கூறியிருப்பதில் உண்மை இல்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

எனது படத்தை காட்டி அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்பது எனக்கு தெரியும். கவுதம் மேனனுக்கு பணம் கொடுத்தவர் கோர்ட்டில் நரகாசுரன் படத்துக்கு எதிராக தடை வாங்கி விட்டார். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை அவர் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு கார்த்திக் நரேன் கூறினார். #Naragasooran #GauthamMenon