2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். நாயகியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
படத்தில் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி பொறியாளர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக் கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி, தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.
இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐ.டி. வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார்.
படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகு நாளாச்சு என்று பாராட்டியுள்ளார். கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளாராம். சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டிசிங்கம் என பெயர் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால் தான் இந்த படத்திற்கு இற்த தலைப்பு வைத்திருக்கிறார்கள். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.