சினிமா

கே.பாலசந்தரை பார்த்து டைரக்‌ஷன் கற்றேன் -கன்னட இயக்குனர் நரேந்திரபாபு

‘கேக்காமலே கேட்கும்’ படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் நரேந்திர பாபு, இயக்குனர் கே.பாலசந்தரை பார்த்து டைரக்‌ஷன் கற்றுக் கொண்டதாக இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

மாலை மலர்

‘கேக்காமலே கேட்கும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் இயக்குநர் நரேந்திர பாபு கன்னடத்தை சேர்ந்தவர். அம்மா மேட்டுபாளையம், அப்பா கர்நாடகம். ஏற்கனவே கன்னடத்தில் பல படங்களை இயக்கியிருக்கிறார். மூன்று வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார்.

என் அம்மாவின் தாய்மொழியான தமிழில் படமெடுக்க வேண்டுமென்று ஆவலாக இருந்தேன். அதுபற்றி யோசித்தபோது கிடைத்த கதை ‘கேக்காமலே கேட்கும்’. இது ஒரு பேய் கதை.

நான் டைரக்‌ஷன் கற்றுக் கொண்டது மறைந்த கே.பாலசந்தரிடம் தான். அவர் படங்களை பார்த்தே கற்றுக் கொண்டேன். பாக்யராஜ், மணிரத்னம் படங்களையும் பார்ப்பேன்.

தமிழில் ஒரு பேய் கதை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்பு, எல்லா பேய் படம் மாதிரியும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இதில் ரத்தம் இருக்காது, இரவு நேர காட்சிகள் இருக்காது, 12 மணிக்கு மணி அடிக்காது. ஆனால், சுவாரஸ்யமான கதையாக இருக்கும். இப்பொழுது அனைவரிடமும் இருக்கும் பொதுவான வி‌ஷயம் செல்போன். அதனால் அதை மையமாக வைத்து, போனில் பேய் மிரட்டுவது போல் கதை அமைந்திருக்கும். இது எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், “தணிக்கை முறையை எளிதாக்க வேண்டும்” என்றார். இந்த படத்தை 5 பேர் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். கதாநாயகனாக கிரண், கதாநாயகியாக வந்தனா நடித்துள்ளனர்.