கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் அவரது அரசியல் பயணத்தை துவக்கினார். அதனைத் தொடர்ந்து மதுரையில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் கமல் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பின்னர், கட்சிப் பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். இவ்வாறாக தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் கமல், அரசியல் பயணத்தை துவக்கும் முன்பு அரசின் ஊழல் குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
இந்நிலையில், அரசியல் பயணத்தை துவக்கிய பின்னர் கமல் தற்போது மற்றொரு குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்து அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து கமல் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது,
`மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு'
இவ்வாறு கூறியிருக்கிறார். #KamalHaasan #MakkalNeethiMaiam