சினிமா

‘நீட்’ தேர்வு விலக்கு அவசர சிகிச்சையே: கமல்ஹாசன் கருத்து

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் மட்டும் விலக்கு கிடைத்திருக்கிறது. இது அவசர சிகிச்சையே தவிர, முழு பயன்பெற இனி என்ன செய்யப் போகிறோம்? என கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊழல் குறித்து சமீபத்தில் கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு அரசியலில் புயலை கிளப்பியது. அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். என்றாலும், தொடர்ந்து கமல் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் கமல் வெளியிட்ட டுவிட்டர் செய்தி யில் ‘முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் இவ்வளவு ஊழல் நடந்தும் முதல்-அமைச்சரை பதவி விலக சொல்லி எதிர்க்கட்சியினர் கேட்காதது ஏன்? என்னுடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றமே. என் குரலுக்கு வலுசேர்க்க தைரியம் உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் ஒரு கருவி மட்டுமே. ஒரு வேளை கருவி மழுங்கி விட்டால் வேறு ஒன்றை தேட வேண்டியது தான்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இது பற்றி கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

நன்றி. நீட், மாணவரின் தவிப்பு உணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும், அனைத்து கட்சிகளுக்கும் ஒருவருட வாய்ப்பு அவசர சிகிச்சையே. இனி என்ன செய்வோம்?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT