சினிமா

குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’

சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கலகலப்பு-2’ படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குடியரச தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. 

சுந்தர். சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி, விச்சு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். 

இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கலர்புல்லான டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

இதனால் படத்தின் வியாபாரமும் சூடுபிடித்திருக்கிறது. படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் இன்னமும் கிடைக்காததால்,  குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய சுந்தர்.சி முடிவு  செய்ருதிருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கை குழு சான்றிதழ் இன்றோ, நாளையோ கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது.