2008ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி இன்று 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் ரசிகர்கள் இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், சசிகுமார் சுப்ரமணியபுரம் போன்ற படத்தைக் கொடுத்து இன்றுடன் 10 வருடங்களாகிவிட்டன. ஆனால் இப்போது நீங்கள் நடிகராகி விட்டீர்கள். சுப்ரமணியபுரம் போன்ற படங்களை தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இப்படம் தான் கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படம் எடுக்க தனக்கு ஊக்கமாக அமைந்ததாகவும் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய், ‘சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து அழகர் வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய ரசிகர்கள் என்னை நடிகராக நிலைக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் இல்லையென்றால் நான் ஒன்றும் இல்லை. இயக்குனர் சசிகுமாருக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி. எப்பவும் ரசிகர்கள் பாராட்டும் படத்தை கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.