2015-ம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. இது தொடர்பாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த தியேட்டர்களை ரூ.1000 கோடிக்கு இளவரசியின் மகன் விவேக் விலைக்கு வாங்கினார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த சொத்துக்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே லஞ்ச ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள நிலையில் இந்த புதிய சொத்துக்குவிப்பு குறித்து என்ன பதில்’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்த தியேட்டர்களை விலை கொடுத்து வாங்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு மட்டுமே அவர் எடுத்துள்ளதாக பதில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
அந்த தியேட்டர்கள் மட்டுமின்றி விவேக் கட்டுப்பாட்டில் மொத்தம் 136 தியேட்டர்கள் உள்ளதாகவும் புகார் எழுந்தது. இது பற்றியும் வருமானவரித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜாஸ் சினிமா நிறுவனம் பல முன்னணி நடிகர்களின் படத்தை வினியோகித்துள்ளது. தமிழ் திரைத்துறையில் இது முக்கிய நிறுவனமாக உள்ளது. சினிமா வினியோகத்தில் நடந்த போலியான பரிவர்த்தனைகள் குறித்தும் வருமான வரித்துறைக்கு ஏற்கனவே புகார்கள் சென்றிருக்கிறது.
இதையடுத்து, சோதனையின் போது விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளையும் கேட்டனர். ஜாஸ் சினிமா தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்க பணம் வந்தது எப்படி? குறிப்பாக ரூ.1000 கோடி எப்படி வந்தது என்று அவரிடம் துருவி துருவி கேள்வி கேட்டனர். அதற்கு விவேக் பதில் அளிக்கையில், லக்ஸ் தியேட்டரில் உள்ள புரொஜக்டர், பர்னிச்சர், ஏர்கண்டிஷன் போன்றவற்றை அடமானம் வைத்து ரூ.42.50 கோடி கடன் வாங்கி அந்த தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்ததாக விவேக் கூறியதாக தெரிகிறது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் நம்ப மறுத்துவிட்டனர். ஜாஸ் சினிமா தியேட்டர்களின் 1 நாள் வியாபார மதிப்பு எவ்வளவு என்பது எங்களுக்கு தெரியும் என அதிகாரிகள் அவரிடம் கூறியுள்ளனர்.
மேலும் ஜாஸ் சினிமா தியேட்டர் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளையாக்கப் பட்டிருப்பதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.